5 வயது குழந்தையுடன் பாடிய விஜய் ஆண்டனி

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘ஹிட்லர்’. செப்டம்பர் 27ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, அவர்கள் முன் ‘ஹிட்லர்’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவிஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றினார். அப்போது 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு,  அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் தனா பேசியதாவது…
என் படம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஆனால் இப்படம் கொஞ்சம் மாறுபட்ட ஆக்சன் படமாக இருக்கும். எனக்கு எல்லாவிதமான படமும் செய்ய வேண்டும் என ஆசை. அந்த வகையில்தான் இந்த ஆக்சன் படம் செய்துள்ளேன். விஜய் ஆண்டனி சாரை  இதில் வித்தியாசமாகப் பார்க்கலாம். ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
“இந்தப்படத்தைத் தயாரித்த நண்பர் ராஜாவுக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படத்தில் இயக்குநர் தனா அருமையான மெசேஜ் வைத்திருக்கிறார். ரசிகர்களுக்குப் பிடிக்கும் ஆக்சன் படமாக இப்படம் இருக்கும். தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

பரபரப்பு திருப்பங்களுடன் ஒரு அழகான  காதலும் கலந்த திரைக்கதையில், அனைவரும் ரசிக்கும் வகையிலான, திரைப்படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப்பிறகு  நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்  விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைக் கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international  சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

By Cauveri Manikkam